×

ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவி வகிக்க தகுதி இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன் அறிக்கை

சென்னை: சிறுபான்மையினரைப் பற்றி அநாகரிகமாக பேசியுள்ள ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்று திமுக செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் வாக்குச் சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை சந்தித்த அதிமுகவைச் சேர்ந்த சிறுபான்மையினர் ஒருவர், அவரது சமூகத்தை சேர்ந்த சிலரை அழைத்துக் கொண்டு கோரிக்கை மனு வழங்கினார். அப்போது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘உங்களுக்கு நாங்கள் ஏன் உதவ வேண்டும். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடமாட்டீர்கள்; உங்களிடம் நான் மனு வாங்க மாட்டேன்’ என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி கடுமையாகப் பேசியுள்ளார்.

இதுபோல், அநாகரிகமாக - அருவருக்கத்தக்க வகையில், சிறுபான்மையினரைப் பற்றி பேசியுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவாகிறார். சிறுபான்மை மக்களைப் பற்றி இப்படி பேசிய அவர் உடனடியாக அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை, அனைத்து மத மக்களும் நட்புடனும் - நல்லுறவுடனும் - சகோதரத்துவத்துடனும் பழகி வருகிறார்கள். ராஜேந்திரபாலாஜியின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சை திமுக வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajendra Balaji ,minister ,DKS Illangovan , Rajendra Balaji, D.K.S. Illangovan, Report
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி